உடலில் 150 குண்டுகள் புதைந்துள்ள நிலையில் வாழும் அதிசய மனிதன்

உடலில் 150 குண்டுகள் புதைந்துள்ள நிலையில் வாழும் அதிசய மனிதன்

இங்கிலாந்தின் டரம் கவுன்டியில் உள்ள பேர்வேஸ் பகுதியை சேர்ந்தவர் ஜோ கிளார்க்(33). இவரது முகம், கழுத்தில் அம்மை தழும்பு போல சில புள்ளிகள் இருக்கின்றன.இது என்ன என்று கேட்டால் 3 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவத்தை நினைவு கூர்கிறார். 2007ம் ஆண்டு டிசம்பர் வீட்டு வாசலில் ஏதோ சத்தம் கேட்டது. வெளியே வந்தேன். முகவரி கேட்பது போல 2 பேர் நின்றிருந்தார்கள். 

திடீரென அவர்கள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்தார்கள். படபடவென சுட்டார்கள். முகம், கழுத்து, மார்பு, முதுகு என சரமாரியாக குண்டுகள் பாய்ந்தன. ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் விழுந்தேன். பக்கத்து வீட்டுக்காரர் உடனே ஓடிவந்து என்னை அவரது வீட்டுக்குள் இழுத்துச் சென்று விட்டார்.

அவர் வராவிட்டால் அப்போதே இறந்திருப்பேன். என்னை கொல்லும் திட்டத்துடன் வந்தவர்கள் என்று பின்னர் தெரியவந்தது. 5 பேர் இந்த வழக்கில் சிக்கினார்கள். பொலிஸ் விசாரணையில் ஒரு குழப்பம் நடந்து விட்டது. 

குற்றவாளிகள் தரப்பு வக்கீல் வீட்டில் பொலிசார் சோதனை நடத்தி சில ஆவணங்களை சோதனை செய்தார்கள். மனித உரிமை மீறல் பிரச்னை எழுந்ததால் பொலிசார் புகார் கமிஷன் இப்போது இதை விசாரித்து வருகிறது. 

அந்த 5 பேரும் விடுதலை ஆகிவிட்டார்கள். உடல் வலியை தாங்கிக் கொள்வது பெரும் தண்டனை. மனதளவில் ஏற்பட்ட பாதிப்பு அதைவிட கொடுமை. உண்மையில் துப்பாக்கி சூடு சம்பவத்தில் இருந்து நான் தான் தண்டனை அனுபவித்து வருகிறேன்.

உடல் முழுவதும் ஊசி வைத்து குத்துவது போல இருக்கிறது. உடலுக்குள் நன்கு புதைந்திருப்பதால் ஓபரேஷன் செய்து எடுக்க முடியாது என்று மருத்துவர்கள் கூறிவிட்டார்கள். மொத்தம் 150 குண்டுகள் என் உடம்பில் இருக்கின்றன. 

இதுபற்றி மருத்துவர்கள் கூறுகையில்,"வெளி பொருட்களை உடம்பு அதிக காலம் ஏற்றுக் கொள்ளாது. பல்வேறு பாதிப்புகள் வரலாம். முக்கிய உறுப்புகள் செயலிழக்கும் அபாயமும் உள்ளது. கிளார்க் 25 ஆண்டுகள் முன்கூட்டியே இறந்துவிட வாய்ப்பு இருக்கிறது" என்றனர்

Post a Comment

Previous Post Next Post