அன்பு நபி (ஸல்) மீது அருமை தோழர்களின் ஆத்மீக காதல்

அன்பு நபி (ஸல்) மீது அருமை தோழர்களின் ஆத்மீக காதல்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "ஸெய்யதுனா அபூபக்கர் ஸித்தீக் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் ஈமான் எந்தளவு கனமானது என்றால் உலகிலே தோன்றிய, இனிமேல் தோன்ற இருக்கின்ற அனைத்து மனிதர்களுடைய ஈமானை ஒருதட்டிலும் ஸெய்யதினா அபூபக்கர் ஸித்தீக் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் ஈமானை இன்னுமொரு தட்டிலும் வைத்தால், ஸெய்யதினா அபூபக்கர் ஸித்தீக் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் ஈமான் தான் கனமானதாக இருக்கும்" என்று திருவாய் மலர்ந்தார்கள்... ​​

ஸெய்யதினா அபூபக்கர் ஸித்தீக் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு அந்தளவு உயர்வான ஈமான் எவ்வாறு கிடைத்ததென்றால் கண்மணி நாயகம் (ஸல்) அன்னவர்கள் மீது அவர்கள் கொண்டிருந்த அளவுக்கடந்த நேசமும், அன்பும்தான் இந்த உயர்வான ஈமானை பெறுவதற்கு காரணமாக இருந்தது..

எம் பெருமானார் (ஸல்) அன்னவர்கள் மீது அபூபக்கர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கொண்டிருந்த அன்பு இவ்வளவுதான் என்று அளவிடமுடியாது... ஒரு முறை கண்மணி நாயகம் (ஸல்) அன்னவர்கள் தனது தோழரான ஸெய்யதினா அபூபக்கர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களிடம், "ஒருநாள் இரவில் நாம் பிரயாணம்(ஹிஜ்ரத்) செய்யவேண்டி வரும். அப்போது இன்ஷா அல்லாஹ் நான் உங்களை அழைத்துப்போக வருகிறேன்" என்று கூறி வைத்திருந்தார்கள்... சில நாட்களுக்குப்பின் அல்லாஹ்விடமிருந்து ஹிஜ்ரத்தை மேற்கொள்ளும்படி கண்மணி நாயகம் (ஸல்) அன்னவர்களுக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டது...

 ஹிஜ்ரத்திற்காக புறப்பட்ட பெருமானார்  (ஸல்)  அவர்கள், ஒரு நடுநிசி வேளையிலே  ஸெய்யதினா அபூபக்கர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் வீட்டுக்குச் சென்று கதவை தட்டுவதற்காக தனது முபாரக்கான கையை கதவின் மீது வைக்கும் முன்பே கதவு திறந்துக்கொண்டது...

கூடவே ஸெய்யதினா அபூபக்கர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் பிரயாணத்துக்கு தேவையான ஆயத்தங்களுடன் தயாராக வாசலிலே நின்றிருந்தார்கள்...

 இதனைக் கண்ணுற்ற கண்மணி நாயகம்  (ஸல்)   அன்னவர்கள் ஆச்சிரியப்பட்டு, “அபூபக்கரே, நான் இப்போது வருவது உங்களுக்கு எப்படி தெரியும்? வீட்டு வாசலிலே தயாராக காத்திருக்கிறீர்களே? என்று  கேட்டபோது, ஸெய்யதினா அபூபக்கர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்:

 “யா ரசூலுல்லாஹ்! நீங்கள் ஒரு இரவில் என்னை அழைத்துப் போக வருகிறேன் என்று எப்பொழுது கூறினீர்களோ, அன்று முதல் இன்று வரை நான் இவ்விடத்தில் இவ்வாறுதான் காத்துக் கொண்டு இருந்தேன்.

ஏன் என்றால்,அல்லாஹ்வின் ஹபீபான தங்களின் வருகைக்காக நாங்கள் தான் காத்திருக்க வேண்டும். மாறாக அல்லாஹ்வின் ரஸுலே! உங்களை எனது வீட்டு வாசலில் காத்திருக்க வைப்பதா? அந்த பெரிய குற்றத்துக்கு நான் ஆளாகாமல் இருக்கவே இவ்வாறு செய்தேன்" என்றார்கள்...

Also read more இஸ்லாமிய சிந்தனை,

இவ்வாறு அளவுக்கடந்த நேசத்தையும், கண்ணியத்தையும் இனிய மதீனத்து வேந்தர் (ஸல்)  அன்னவர்கள் மீது வைத்திருந்ததால் தான் ஈமானிலே உயர்ந்த அந்தஸ்தை இவர்கள் பெற்றார்கள்...

கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்: “அபூபக்கர் ரழியல்லாஹு அன்ஹு இந்த மேலான நிலையை அடைந்தது தமது உள்ளத்தில் ஒரு மேலான பொருளை கொண்டிருப்பதால் தான்.” 

ஆம், அந்த மேலான பொருள்தான் கண்மணி நாயகம் ﷺ அன்னவர்கள் மீது அபூபக்கர் ரழியல்லாஹு அன்ஹு கொண்டிருந்த அளவுக்கடந்த நேசமும், கண்ணியமும் ஆகும்.

இறைவன் தன்னுடைய மேன்மை மிகு நேசரை, உயிரை விட மேலாக நேசிப்பவருக்கு  வெகுமதி அளிப்பதில் துளியேனும் குறை வைக்க மாட்டான்...


 


Post a Comment

Previous Post Next Post