இறைவன் பெயரை உச்சரிக்க வேண்டிய நாவால் பொய் பேசக் கூடாதுன்னு எங்க அம்மா சொல்லி இருக்காங்க”

இறைவன் பெயரை உச்சரிக்க வேண்டிய நாவால் பொய் பேசக் கூடாதுன்னு எங்க அம்மா சொல்லி இருக்காங்க”

 (கோவயம்புத்தூர் திருக்குறள் ஆய்வுக் கழகத்தின் நிறுவனரும், தலைவருமான தமிழ்ச் செம்மல் முனைவர் மு.க.அன்வர் பாட்சாவின் "சிந்தனையை தூண்டும் வாழ்வியல் நிஜங்கள்" என்ற புத்தகத்திலிருந்து)

அவர் 18 வயது இளைஞர் படிப்பதற்காக ஒரு வணிகர் கூட்டத்தோடு சேர்ந்து பாக்தாத் நகரம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தார். நீண்ட தூரப் பயணம். பயணத்தின் நடுவே திடீரென்று ஒரு கொள்ளைக் கூட்டம் வழி மறிக்கிறது. அவர்களிடம் பயங்கரமான ஆயுதங்கள். அவர்கள் வணிகர் கூட்டத்தை மிரட்டி எல்லாப் பொருள்களையும் பறித்துக் கொண்டுவிடுகிறார்கள். சிலர் தாமாகவே தம்மிடம் உள்ளதை உயிருக்குப் பயந்து கொடுத்துவிடுகிறார்கள்.

இந்த இளைஞர் மட்டும் ஓர் ஓரமாக நின்று நடப்பதைப் பார்த்துக் கொண்டு இருக்க, அதை அந்த கூட்டத்தலைவன் கவனித்து... யார் இந்த சிறுவன்?... அனாதை போல் ஒதுங்கி நிற்கிறானே என்று யோசித்தவாறே, மிகவும் அலட்சியமாகவும், கிண்டலாகவும், இவனிடம் என்ன இருக்கப் போகிறது என்ற மமதையுடன், அவனை நெருங்கி, டேய், உன்னிடம் ஏதாவது இருக்கா? என்றான்.

உடனே அந்த இளைஞர் ஓ... இருக்கிறதே ! என்கிட்டே 40 தினார் (பொற்காசுகள்) இருக்கு... என்றான். கூட்டத் தலைவனுக்கு நம்பிக்கை வரவில்லை. “ஏய் என்னிடம் பொய் சொல்லாதே! உண்மையைச் சொல்லு" என்று மிரட்டினான்.

“ஐயா நான் உண்மையைத் தான் சொல்றேன் என்னிடம் 40 தினார் இருக்கு... 

“எங்கே வச்சிருக்கிறே?... “என் சட்டையின் உள்புறம் வைத்து தைக்கப்பட்டிருக்கு!... கூட்டத் தலைவன் கட்டளையிட அவன் சட்டை கிழிக்கப்படுகிறது. அதிலிருந்து 40பொற்காசுகள் பொலபொலவென்று கீழே விழுகின்றன.

அதைப் பார்த்த கொள்ளையர் தலைவன் விக்கித்துப் போனான். காரணம் கீழே விழுந்தவை பொற்காசுகள் அல்ல... அந்த இளைஞரின் நேர்மை ! அவன் பேசிய உண்மை ! கண்களில் தெரிந்த சத்தியம் ! 

கூட்டத்தலைவன் இளைஞனை நெருங்கி, 

ஏம்ப்பா... நீ என்ன வசதியான வீட்டுப் பிள்ளையா? என்றான். 

இல்லை... எனக்கு அப்பா இல்லே! அம்மா மட்டும் தான். எங்க அப்பா எனக்குன்னுவிட்டுட்டுப் போன சொத்தே இந்த 40 தினார் தான் என்றான்.

அப்படி இருந்துமா? உண்மை பேசணும் என்று ஆசைப்பட்டே. என்கிட்டே ஒண்ணுமில்லேன்னு ஒரு பொய் சொல்லியிருந்தா உன்னை விட்டிருப்போமோ? என்றான் கூட்டத் தலைவன்.

அப்படி இல்லீங்க... நான் இறைவன் திருநாமத்தை அறியக் கூடிய கல்வி ஞானத்துக்காக இப்பப் போய்கிட்டிருக்கேன். “இறைவன் பெயரை உச்சரிக்க வேண்டிய நாவால் பொய் பேசக் கூடாதுன்னு எங்க அம்மா சொல்லி இருக்காங்க” அதனாலே, நான் எப்பவுமே பொய் சொல்ல மாட்டேன். எங்க அம்மாவுக்கு வாக்குக் கொடுத்திருக்கேன் என்று இளைஞன் கூற, கொள்ளையர் கூட்டமே வாயடைத்துப் போகச் செய்த அந்த இளைஞர் யார் தெரியுமா? அவர் தான் ஆன்மிகச் சாதனைகள் பல புரிந்த முல்லாமுகையத்தீன் அவர்களாவார்.

கொள்ளையர்களின் மனம் திருந்தி நல்வழிப்பட, பின்னாளில் அந்தக் கொள்ளையர் தலைவன் ஒரு மகான் ஆக மாறுகிறார். வாய்மை வெல்லும் என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டாகும்.

அரிச்சந்திரன் கதை, அண்ணல் மகாத்மா காந்தியடிகள் வாழ்க்கை , உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாத வாய்மையாளர் வள்ளல் இராமலிங்க அடிகள் வாழ்வு, அன்னை தெரேசா வாழ்க்கை எனப் பல சான்றுகளைக் கூறலாம். 

நீ உண்மையாளனாக இருந்தால் உலகத்தின் வாசல் உனக்காகத்திறந்திருக்கும்... உன் புகழ்பாடும்.

Post a Comment

Previous Post Next Post