புகழுக்காக செய்யும் தர்மம் நிலைத்து நிற்காது

புகழுக்காக செய்யும் தர்மம் நிலைத்து நிற்காது


இன்று அநேகமானவர்கள் தர்மம் செய்வது புகழுக்காக என்பது நன்றாகப் புரிகின்றது.

பணம் கொடுத்து புகழ்தேடுவது என்பது இப்படித்தான்,.

தர்மம் என்ற பெயரில் பல இழிவான செயல்களை செய்கின்றார்கள் கொடுப்பவர்களையும் எடுப்பவர்களையும் படம்பிடித்து சமூகவளைதலங்களில் பதிவிட்டு புகழ் தேடுகின்றார்கள்.

அதைபற்றிய விளக்கங்களை ஒரு வீடியோவாக பதிவிடுகின்றார்கள் .

இது முற்றிலும் இஸ்லாத்தில் வெறுக்கப் பட்ட ஒரு செயல்.

பொதுவாக கல்ஹின்னையை எடுத்துக்கொண்டால் அன்றும் இன்றும் பல ஹாஜியார்களும் ,வியாபாரம் செய்பவர்களும் ,அடுத்தவர்கள் அறியாவண்ணம் ரகசியமாக உதவிகள் செய்துகொண்டிருக்கின்றார்கள்.

அவர்கள் அவற்றை விளம்பரப்படுத்தி புகழ் தேட நினைப்பதில்லை.அவர்களுக்கு அப்படிப்பட்ட புகழ் அவசியல் இல்லை என்று நினைப்பவர்கள். 

ஆனால் புதிதாக பணம் கைக்கு வந்த சில புகழ் விரும்பிகள் தாங்களும் ஊரில் ஹாஜியார்களைப் போன்று புகழ் பெறவேண்டும்,நான்குபேர் எங்கள் பின்னால் கைநீட்டி வரவேண்டும்  என்று நினைத்து செய்கின்ற உதவிகள் வீனாகிவிடுகின்றது.

புகழை மட்டும் எதிர்பார்த்து செய்கின்ற எந்த ஒரு சேவையும் நிலைத்து நிற்காது என்பதை இந்த புதிய பணக்காரர்கள் புரிந்துகொள்ளவேண்டும் 

ஏனெனில், அவை நற்கூலியை அழித்து நற்செயல்களை வீணாக்கிவிடும். மகத்தான இரட்சகனின் முன்னிலையில் நிற்கும் மறுமை நாளில் இழிவை தேடித்தரும். இத்தூய மார்க்கத்தின் அடிப்படைகளில் தலையாயது, மனிதனின் சொல்லும் செயலும் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்திற்காக மனத் தூய்மையுடன் அமைந்திருக்க வேண்டும் என்பதாகும்.

ஜின்களையும் மனிதர்களையும் (எனக்கு வழிப்பட்டு) என்னை வணங்குவதற்கன்றி (வேறெதற்காகவும்) நான் படைக்கவில்லை. (அல்குர்ஆன் 52:56)

எந்த வணக்கமும் அல்லாஹ்வின் திருப்தியை நாடி செய்யப்பட்டால் மட்டுமே அங்கீகரிக்கப்படும்.

(எனினும் அவர்களுக்கோ) இறைவனுடைய கலப்பற்ற மார்க்கத்தையே பின்பற்றி (மற்ற மார்க்கங்களைப்) புறக்கணித்து அல்லாஹ் ஒருவனையே வணங்கி தொழுகையையும் கடைபிடித்து, ஜகாத்தும் கொடுத்து வருமாறேயன்றி (வேறெதுவும் இத்தூதர் மூலம்) ஏவப்படவில்லை. இதுதான் நிலையான சட்டங்களுடைய மார்க்கமாகும். (அல்குர்ஆன் 98:5)
தங்களது பொருளை ஏழைகளுக்கு செலவு செய்யும்போது அதை சொல்லிக் காண்பித்து ஏழைகளின் கண்ணியத்தை காயப்படுத்துபவர்களை அல்லாஹ் வன்மையாகக் கண்டிக்கிறான். முகஸ்துதி கலந்துவிட்டால் அவ்வணக்கம் வீணாகிவிடும்.

விசுவாசிகளே! நீங்கள் உங்களுடைய தர்மத்தைப் (பெற்றவனுக்கு) இகழ்ச்சியையும், துன்பத்தையும் (செய்வது) கொண்டு (அதன் பலனை) வீணாக்கிவிடாதீர்கள். அவ்வாறு (செய்பவன்) அல்லாஹ்வையும் கடைசி நாளையும் விசுவாசம் கொள்ளாது (தான் தர்மவான் என்பதைப் பிற) மனிதர்களுக்கு அறிவிக்கும் பொருட்டு தன் பொருளை செலவு செய்து (வீணாக்கி) விட்டவனுக்கு ஒப்பாவான். அவனுடைய உதாரணம்; ஒரு வழுக்கைப் பாறையை ஒத்திருக்கின்றது. அதன்மீது மண் படிந்தது. எனினும் ஒரு பெரும் மழை பொழிந்து அதைக் ( கழுவி) வெறும் பாறையாக்கிவிட்டது. (இவ்வாறே அவன் செய்த தானத்தை அவனுடைய பெருமை அழித்துவிடும்). ஆகவே, அவர்கள் (தானம்) செய்ததிலிருந்து யாதொரு பலனையும் (மறுமையில்) அடைய மாட்டார்கள். (அல்குர்ஆன் 2:264)

ஏழைகளுக்கு தான் செய்த உபகாரத்தை சொல்லிக் காட்டுவது, அந்த தர்மத்தின் நற்பலன்களை வழுக்குப் பாறையில் ஒட்டியிருந்த மணலை பெரும் மழை அடித்துச் சென்று விடுவதுபோல அழித்து விடுகிறது. புகழுக்காக தர்மம் செய்பவர் அல்லாஹ்வின் நேர்வழிக்குத் தகுதியற்றவர், அவர் நிராகரிப்பாளர்களுடன் இணைக்கப்பட்டு விடுவார் என்பதை இந்த வசனத்தின் பிற்பகுதி சுட்டிக் காட்டுகிறது.

”மேலும் அல்லாஹ் (தன்னை) நிராகரிக்கும் ஜனங்களை (அவர்களின் தீய செயல்களின் காரணமாக) நேரான வழியில் செலுத்தமாட்டான்.” முகஸ்துதிக்காரர்கள், மனிதர்கள் தங்களைப் புகழவேண்டும் என்பதற்காக நல் அமல்களைச் செய்வார்கள். மகத்தான இரட்சகனின் திருப்பொருத்தத்தை நாடமாட்டார்கள். இவர்களைப் பற்றி அல்லாஹ் குறிப்பிடுகிறான்…

அவர்கள் தொழுகையில் நின்றாலோ சோம்பேறிகளாக நின்று மனிதர்களுக்குக் காண்பிக்(க விரும்பு)கின்றார்கள். அவர்கள் வெகு சொற்பமாகவே அன்றி அல்லாஹ்வை தியானிப்பதில்லை. (அல்குர்ஆன் 4:142)

Post a Comment

Previous Post Next Post