ஆதம் மலை செல்லும் புராதன நடைபாதை தேயிலைப் பயிர்ச் செய்கைக்கு உதவியதெப்படி?

ஆதம் மலை செல்லும் புராதன நடைபாதை தேயிலைப் பயிர்ச் செய்கைக்கு உதவியதெப்படி?

இலங்கையின் மத்திய மலையகப் பிரதேசம்  இயற்கையின் அருட்கொடைகளாக உயர்ந்த மலைகளையும், நீர் வளத்தையும், நில வளத்தையும் நிறையப் பெற்ற ஓர் பரந்த பிரதேசமாகும். ஆங்கிலேயர் வருகைக்கு முன்னர் இப்பகுதிகளில் நெல் மற்றும் தானியப் பயிர்கள் சிறப்புற்று விளங்கியது.

புராதன காலத்தில் பெருமளவில் வனாந்திரமாகக் காட்சியளித்த இப்பிரதேசம்  சிவனொளிபாத மலைக்குச் செல்லும் அடிப்பாதையைக் கொண்டு ஒன்றிணைக்கப்பட்டிருந்தது. சிவனொளிபாதமலை என்ற பெயர் கொண்டு அழைக்கப்படும் இப்புனித பூமியை சிங்கள பௌத்தர்கள் “சிரிபாத” அல்லது “சமனலகந்த” என்று அழைப்பர்.

ஆனால் இம்மலை புராதன காலம் தொட்டு “ஆதம்மலை” என்றே அழைக்கப்பட்டு வந்துள்ளது. இம்மலை பற்றி  என்சைக்ளோபீடியாக்களிலோ - இணைத்தளத்திலோ அல்லது புராதன நூல்களிலோ தேட விளையும் ஒருவர் “ஆதம் மலை” (யுனயஅ’ள pநயம) என்ற தலைப்பிற்கே செல்ல வேண்டியுள்ளமை இதன் வரலாற்றுத் தொன்மையை உறுதிப்படுத்துகின்றது.

வரலாற்றாசிரியர் வில்ஹிம் ஹைக்கர் புராதன காலத்தில் இம்மலைக்குச் செல்லும்  பிரதேசத்தில் வாழ்ந்த மக்கள் ஆபத்துக்கள் நிறைந்த வாழ்க்கையை அனுபவித்திருப்பதாகக் குறிப்பிடுகின்றார்.

ஆதம்மலைக்குச் செல்லும் மலையகத்தின் புராதன ஒற்றையடிப்பாதை கம்பளையிலிருந்து ஆரம்பமாகி - உலப்பனை - நாவலப்பிட்டிய - பலந்தொட்டை - கினிகத்ஹேன - ஹற்றன்- மஸ்கெலிய ஊடாகச் சென்றுள்ளது. சிங்கள அரசர்களது காலம் முதல் உள்ளுர் யாத்திரீகர்கள் மாத்திரமன்றி வெளியூர் யாத்ரீகர்களாகளாலும் இப்பாதையே  மலைக்குச் செல்லும் பாதையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

வனாந்திரக் காடுகளில் பயணிப்போர் கொடிய மிருகங்களையும் - இன்னோரன்ன பல பிரச்சினைகளையும் சந்திக்க நேரிடுவதால்- அக்காலத்தில் நதிப்போக்குவரத்து அச்சமில்லாத போக்குவரத்தாகக் கருதப்பட்டது. அதற்காக ஆதம்மலை செல்லும் மக்கள் மகாவலி நதியையும் பயன்படுத்தியுள்ளமை வரலாறாகும்.

கட்டுக்கஸ்தொட்டையை ஏறு துறையாகக் கொண்டு வள்ளங்களிலும் கட்டுமரங்களிலும் ஏறுகின்ற யாத்ரீகர் கம்பளையில் இறங்கி - அதன் பின்னரே அடர்ந்த காடுகளுக்கு மத்தியிலான நடைபாதையை உபயோகித்துத் தமது பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.

நீண்டு வளைந்த தரைவழிப் நடைப்பாதையானது மலைகள் -  கணவாய்களினூடாக  மஸ்கெலியாவை ஊடறுத்துச் சென்றிருக்கின்றது.  இவ்வொற்றையடிப்பாதை மகாவலியுடன் சங்கமமாகும் பல நீரறுவிகளையும் - ஓடைகளையும் அண்டியதாக அமைந்திருந்தமை யாத்ரீகர்கள் ஆங்காங்கே இளைப்பாறி - உடற்சுத்தம் செய்து செல்வதற்கு வசதியாக இருந்திருக்க வேண்டும்.

 

மகாவம்சத்தின் குறிப்புகளில் குருநாகலையை ஆட்சிபுரிந்த இரண்டாம் பராக்கிரமபாகு அரசனின் கட்டளைக்கமைய அமைச்சர் தேவபத்திராசன் ஆதம்மலைக்குச் செல்லும் பாதையைச் செப்பனிட்டதாக வரலாற்றாசிரியர் சுமனசிரி தஹநாயக்க தனது ‘அநுராதபுர யுகய’ என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். அதுபோன்று முதலாம் விஜயபாகு மன்னன் காலத்தில் (1059-1114) இந்நடைபாதை நெடுகிலும் பயணிகள் தங்கிச் செல்வதற்கு தங்குமடங்கள் அமைக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது.

நடைபாதையெங்கும் நீர் நிலைகளையும், ஓடைகளையும் கடப்பதற்கு மரப்பாலங்கள் அமைக்கப்பட்டிருந்தன. அவ்வாறாக 40 அடி நீளமான ஒரு மரப்பாலம் உலப்பனை புகுமுகத்தில் அமைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பயணங்களின் இளவரசன் எனப் போற்றப்படும் மொரோக்கோ தேசத்தைச் சோ;ந்த தேச சஞ்சாரி  இப்னு பதூதா (1304-1364) குருநாகலையை ஆட்சி புரிந்த நாலாம் புவனேகபாகு காலத்தில் ஆதம் மலையைத் தரிசிப்பதற்காக வந்தபோது- அதற்காக அரசன் உதவியதாகவும் வரலாற்றில் கூறப்படுகின்றது. இக்காலத்தில் டில்லி அரசவையில் முஹம்மது பின் துக்ளக் ஆட்சி புரிந்ததாக அறிய முடிகின்றது.

1815ம் ஆண்டுகளைத் தொடர்ந்து மத்திய பிரதேசம் முழுவதும் ஆங்கிலேயர் வசமாக்கப்பட்ட பின்னர்- நாட்டில் அறிமுகஞ்செய்யப்பட்ட தேயிலைப் பயிர்ச்செய்கையால் - மலையகத்தின் பொருளாதார உறவுகள் சர்வதேசமயப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். பூர்வீகம் முதல் இப்பகுதிகளில் நெல் மற்றும் தானியப் பயிர்கள் சிறப்புற்று விளங்கியிருந்தபோதிலும் படிப்படியாக இப்பிரதேசம் தேயிலைப் பயிர்ச்செய்கைக்காகப் பயன்படுத்தப்படலாயின.

ஆங்கிலேயர் வருகையைத் தொடர்ந்து மலையகப் பிரதேசத்தில் முதன் முதலாகக் கோப்பிப் பயிர்ச் செய்கையே அறிமுகமாகியது. கோப்பிச் செய்கையின் முன்னோடியாகப் போற்றப்படுபவர் கேணல் ஜோர்ஜ் போர்ட் ஆவர்.

கம்பளை சிங்ஹப்பிட்டியில் முதலாவதாக பயிர்ச் செய்கை ஆரம்பமாகி, நாளடைவில் மலையகமெங்கும் வியாபித்தபோதிலும் 1875களைத் தொடர்ந்து இப்பயிருக்கு ஏற்பட்ட நோய் காரணமாக கோப்பிப் பயிர்ச்செய்கை வீழ்ச்சியடையவே -   கலஹா - லூல்கந்தர தோட்டத்தில் தேயிலைப் பயிர்ச்செய்கை முதன் முதலாக  சேர் டெய்லர் என்ற ஆங்கிலேயரால் அறிமுகஞ் செய்து வைக்கப்பட்டது.


இவ்வாறு சிறிய அளவில் ஆரம்பமாகிய தேயிலைப் பயிர்ச் செய்கை 1840ம் ஆண்டு ஆங்கிலேயரால் அறிமுகஞ் செய்யப்பட்ட பாழ்நிலச்சட்டத்தினால் குடிகளுக்குச் சொந்தமாக விளங்கிய நிலங்கள் - சேனைகள் - சமவெளிகள் - காடுகள் அனைத்தும் அன்றைய ஆங்கில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப் பட்டு அந்நிலங்களில் ஆங்கிலேய முதலீட்டாளர்கள் தேயிலைப் பயிர்ச்செய்கையை விஸ்தரிக்க வாய்ப்பளிக்கப்பட்டது. தசாப்தங்களாக மலையமெங்கும் இலட்சக் கணக்கான ஏக்கர் நிலங்களில் தேயிலையே பிரதான பயிராக செய்கை பண்ணப்படலாயிற்று.

இலங்கையின் ஆரம்பக்குடிகள் மலையகப்பிரதேசத்தில் பெருந்தோட்;டங்களில் உழைப்பதற்குத் தம்மை இசைவாக்கம் செய்து கொள்ளாமையால் - ஆங்கிலேயர் இந்;தியாவிலிருந்து தொழிலாளர்களை அழைத்து வந்து பெருந்தோட்டங்களில் வேலைக் கமர்த்தினர்.

அவர்கள் இன்று மலையகமெங்கு செறிந்து வாழ்கின்றமை குறிப்பிடத்தக்கது. தேயிலை இன்றுவரை இலங்கைப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விளங்குகின்றமையும் - உலக மக்கள் தேயிலை என்கின்றபோதெல்லாம் இலங்கைத் திருநாட்டை நினைவுகூர்வதும் பெருமையைத் தருகின்றது.  

ஆங்கிலேயரினால் அறிமுகப்படுத்தப்பட்ட பெருந்தோட்டப் பயிர்ச்செய்கைக்கான  போக்குவரத்து வசதிக்காக தரைப்பாதையும் - புகையிரதப் பாதையும் நிர்மாணிக்கப்பட்டபோது- ஆதம்மலை செல்லும் நடைபாதையைத் தழுவியதாகவே  நாவலப்பிட்டி முதல் ஹற்றன் வரையிலான தரைப்போக்குவரத்துப் பாதையும் - புகையிரதப் பாதையும் அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.       (முற்றும்)




Post a Comment

Previous Post Next Post