நவீன கணினி உலகின் எழுச்சிக்கு வித்திட்ட பெண் தான் அடா லவ்லேஸ்.

நவீன கணினி உலகின் எழுச்சிக்கு வித்திட்ட பெண் தான் அடா லவ்லேஸ்.

உங்களில் யாராவது அடா லவ்லேஸ் என்ற பெயரைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன் பிறந்த  ஆங்கிலேய கணிதப்  பேரரசி அவர். கணினிக்கு வரைபடம் அமைத்தவர்! பிறவியிலேயே கற்பனைத்திறன் மிக்க பெண். மிகச் சிறந்த எழுத்தாளர். அவர்தான் அகஸ்தாஅடாகிங்,லவ்லேஸின் கோமாட்டி(Augusta Ada King-Noel, Countess of Lovelace ) என்பதே. இதனை சுருக்கி “அடா லவ்லேஸ்” என அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டார். இவரின் இயற்பெயர் அகஸ்தா அடா பைரன் .

அடா  பேர் சொல்லும் கணினி
கணினிக்கு அடிப்படையான முதல் நிரலை (புரோகிராம்) வடிவமைத்தவர். அடா லவ்லேஸ்தான். கணிப்பொறியின் முழுத் திறமையை /   பரிமாணத்தை  அறிந்துகொண்டு பணியாற்றியவர் இவரே. சாதாரண கூட்டல், கழித்தல், பெருக்கல் போன்ற சாதாரண செயல்பாடுகளைத்  தாண்டி கணினி  அற்புதமாக  செயலாற்றுவதாகக்  கண்டறிந்தார். கணினியின் முதல் அல்காரிதத்தை 1843 ல் வெளியிட்டவர் அடா லவ்லேஸ்.

கணினி கணினி 
இன்று கணினியைத் தவிர்த்துவிட்டு இந்த உலகைக் கற்பனை செய்து கூடப் பார்க்க முடியாது.சிறு குழந்தையிலிருந்து நவீன உலகில் பணியாற்றி ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கும் விஞ்ஞானி வரை கணினியின்றி செயல்பாடு இல்லை.  கணினிக்கு வன்பொருள்(hardware) கட்டமைப்பு தேவையான அளவுக்கு, மென்பொருள் தரவுகளும் அவசியம். மென்பொருளை மையமாகக் கொண்டு உயர் கல்வி, வேலை வாய்ப்பு, தகவல் தொடர்பு, வர்த்தகம் மற்றும்  தொழில்நுட்பம் என நவீன உலகம் இது வரை இல்லாத அளவு றெக்கை கட்டி பறக்கிறது.  இதற்காண விதை போட்டவர் ; அடித்தளமிட்டவர் அடா லவ்லேஸ் என்ற கணித மேதைதான்.

அடாவின் பிறப்பு 
அடா லவ்லேஸ் யாருடைய மகள் தெரியுமா? புகழ் பெற்ற காதல் ரசம் சொட்டும் கவிதைகளின் சொந்தக்காரார் படைப்பாளி ஆங்கில கவிஞர் லார்ட் ஜார்ஜ் கோர்டான் பைரனின் (Lord George Gordon Byron) சட்ட பூர்வமான ஒரே மகள். அடா லவ்லேசின் அன்னை பெயர் ஆன்னி இசபெல்லா மில்லிபான்கி பைரன் (Lady Anne Isabella Milbanke Byron) . மற்ற பெண்கள் மூலம் பைரனுக்கு நிறையக் குழந்தைகளும் இருந்தன . 

ஆங்கில கவிஞர் லார்ட் ஜார்ஜ் கோர்டான் பைரனின் நேரடி வாரிசு அடா . நிச்சயமாக லார்ட் பைரன் ஒரு வித்தியாசமான தந்தைதான். அவர் அடா லவ்லேஸ் பிறந்ததும் சொன்ன முதல் வாக்கியம் என்ன தெரியுமா? நான் உன்னை எப்படிச் சித்திரவதை செய்யப்போகிறேன் தெரியுமா  என்றாராம். அடா லவ்லேஸ் 1815, டிசம்பர் 10ம் நாள் லண்டனில் உள்ள பிக்காடிலி என்ற இடத்தில் பிறந்தார்.

 அடா லவ்லேசின் பெற்றோர் நிலை
அடா லவ்லேஸின் தந்தை பைரன் ஒரு நிலையற்ற மனிதர்; பெண்கள் விஷயத்தில் ரொம்பவும் மோசம். அடா லவ்லேசின் பெற்றோர்களின்  இல்லற வாழ்க்கையின் ஆயுள்  மிகக் குறைந்த நாட்களே இருந்தன. அதுவும் மகிழ்ச்சியே இல்லாத குடும்ப வாழ்க்கையை வாழ்ந்தார் அடா லவ்லேஸின் அன்னை  லேடி ஆன்னி இசபெல்லா மில்பான்கே பைரன். அடா லவ்லேஸைப்பற்றி, ஜூலியா மார்க்ஸ் என்பவர் ஒரு புத்தகம் எழுதியுள்ளார். அதன் பெயர்  “லேடி பைரன் மற்றும் அவரது மகள்கள்”.   இதில் ஜூலியா மார்க்ஸ் குறிப்பிட்டுள்ள விஷயம் நமக்கெல்லாம் கொஞ்சம் அதிர்ச்சியானது என்றாலும், அந்தக் காலத்தில் அது ஒன்றும் அது பெரிய விஷயமல்ல. குழந்தை பிறந்த ஒரு மாதத்துக்குள், பைரன் தனக்கு ஒரு நாடக நடிகையுடன் தொடர்பு உண்டு என்றும் அவருடன்தான் வாழ்க்கை நடத்தப்போவதாகவும் அடாவின் அன்னையிடம்  கூறியுள்ளார். மேலும் மூன்று நாட்கள் சென்ற பின்னர்,  வேறு எங்காவது நல்ல இடம் பார்த்துக்கொண்டு வெளியே சென்றுவிடும்படி அடாவின் அன்னை லேடி ஆன்னி இசபெல்லா விடம்  கூறிவிட்டார்.” பரவாயில்லை உனக்கு இந்தக் குழந்தை நல்ல துணையாக இருக்கும்” என்றார். அடா பிறந்த ஒரு மாதத்திலேயே பைரன் தனது மனைவி ஆன்னி இசபெல்லாவையும் , குழந்தையையும் விட்டுப் பிரிந்துவிட்டார். பின்னர் நான்கு மாதத்தில் லண்டனை விட்டே  சென்றுவிட்டார். அதன்பின் லண்டனுக்கு பைரன் திரும்பவே இல்லை,  அடா லவ்லேஸைப் பார்க்கவே இல்லை. அவர் இறக்கும்போது அடா லவ்லேஸூக்கு வயது 8.

லார்ட் பைரனின் முடிவு 
லார்ட் பைரன் 1824ல்,கிரேக்கத்தின் சுதந்திரப்போரில் , காய்ச்சல் ஏற்பட்டு , மிசோலாங்கி (Missolonghi) என்ற இடத்தில் உயிர் நீத்தார். அப்போது அடா லவ்லேசுக்கு வயது 8.  அதன் பின்னர் எப்போதும் அடா லவ்லேஸ் தன் தந்தையை சந்தித்ததே இல்லை. முழுமையாகத்  தாயின் கண்காணிப்பிலேயே வளர்க்கப்பட்டு உருவாக்கப்பட்ட பெண்தான் அடா லவ்லேஸ்.

அடாவின் கல்வித்தாய் 
அடா லவ்லேசின் அன்னை ஆன்னி இசபெல்லா, அடாவுக்குக் கணிதமும், தத்துவமும் சொல்லிக்கொடுத்தார். அந்தக் காலத்தில் பெண்கள் கணிதம் மற்றும் அறிவியல் படிப்பது கிடையாது. பெண்களுக்கு அவை வேண்டாம், தேவையில்லை எனச் சமூகம் கருதிய காலம் அது. அடாவுக்குத் தந்தையின் குணங்கள் வந்துவிடக்கூடாதே என்று கவலைப்பட்டார் அவரது அன்னை ஆன்னிபெல்லா . எதிலும் பைரனின் சாயல் கொஞசமும் இல்லாதபடி முக்கியமாக மகளின் கவனம் கவிதை பக்கம் சாயாதபடி, ஆன்னி   பார்த்துப் பார்த்து வளர்த்தார். அது மட்டுமன்று. அடா லவ்லேசின் அன்னை ஆன்னிபெல்லாவும் கணிதத்தில் திறமைசாலிதான். லார்ட் பிரானே கூட ஒரு முறை ஆன்னிபெல்லாவை ” இணை வரைபடங்களின்”(parallograms) ‘ இளவரசி என்று பெருமையுடன் பாராட்டி உள்ளார். எனவேதான் இயல்பாகவே கணிதத்தின் மீது ஆர்வம் கொண்ட ஆன்னிபெல்லா தன மகள் அடாவுக்குக்  கணிதமும் அறிவியலும் சொல்லித்தர ஏற்பாடு செய்தார்.

கணிதக்காதலி அடா 
அடாவுக்கு கணிதத்தின் மீது அளப்பரிய காதல். அவள் சிறு வயதில் அடிக்கடி நோய்வாய்ப்பட்டு படுக்கையில் இருப்பாள்.  அப்போதும் கூட அடா கணிதத்தோடுதான் பேசிக்கொண்டு இருப்பாள்; கணிதத்தைக் கற்றுக்கொள்ள அதிக நேரம் செலவிட்டாள். அவளுக்கு 12 வயதாகும்போது, அவள் பறக்க ஆசைப்படுகிறாள்.  எப்படிப் பறப்பது என்று யோசித்து அவளாகவே இறக்கைகள் செய்கிறாள். இதனை அடா பறவைகளில் இறக்கைகள் பார்த்தும், அவை எப்படிப் பறக்கின்றன என்று அறிந்தும் பறக்கும் எந்திரத்தை உருவாக்குகிறாள். பின்னர் அதையே “பறக்கும் கலை”( the art of flying) என்ற பெயரில் ஒரு புத்தகமாக எழுதினாள். பின்னர் அது அவளின் நண்பரான சார்லஸ் பாபேஜுக்கு தெரிந்தது. அடா லவ்லேசை அவர் பறக்கும் தேவதை (Lady Fairy) என்று அழைக்கிறார்

எண்களின் தேவதை
குழந்தைப் பருவத்தில் அடா லவ்லேஸ் அடிக்கடி நோய்வாய்ப்படுவாள்.; பள்ளி செல்ல  முடியாது . இருப்பினும் கல்வியில் சிறந்து விளங்கினாள். வீட்டில் உடல் நலமின்றி ஓய்வாக இருந்தபோது இவரது வாழ்க்கைக்குப் பறக்க ஒரு சிறகைக் கொடுத்தது  கணிதம். அப்போது அடா லவ்லேஸ்  பறக்கும் எந்திரத்தின் மாடலை உருவாக்கினாள். இளம் வயதிலேயே, அடாவுக்கு எண்கள் மற்றும் மொழியின் மேல் காதல் அதிகமாக இருந்தது.  சமூக சீர்த்திருத்தவாதி வில்லியம் பிரென்ட், குடும்ப மருத்துவர் வில்லியம் கிங் , ஸ்காட்டிஷ் கணித மேதை மற்றும் வானவியலாளர் மேரி சோமேர்வில்லி  இவர்களிடம் அடா லவ்லேஸ் ஏராளமான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் பெற்றார். இவர்களில் ஒருவர் மேரி சோமேர்வில்லி  என்பவர். ராயல் வானவியல் கழகத்தில் முதல் பெண் இவர்தான். இவர்தான் அடா லவ்லேசுக்கு உலகின் கணினித் தந்தை சார்லஸ் பாபேஜை அறிமுகம் செய்து வைத்தவர்.  

கல்வி மேலும் கல்வி 
அடா லவ்லேசின் கல்வி மற்றும் சமூக நடவடிக்கைகள் ஆண்ட்ரூ கிராஸ், சார்லஸ் பாபேஜ் , சர் டேவிட் புரூஸ்டர் , சார்லஸ் வீட்ஸ்டோன், மைக்கேல் பாரடே மற்றும் சார்லஸ் டிக்கன்ஸ் போன்ற அறிவியல் அறிஞர்கள் மூலம் வெளிப்பட்டது. இந்தத் தொடர்புகள் மூலம்தான் அடா லவ்லேஸ் தனது கல்வியை மேலும் தொடர்ந்தார். அடா அவரது செயல்பாட்டைக் கவிதை அறிவியல் என்கிறார். அவரையே கணித உலகம் ஆய்வாளர் என்றும் மீவியர்பியன் ( Analyst& Metaphysician) என்றும் சொல்கிறார்கள்.

 பருவ வயதும் கணித ஈர்ப்பு நட்பும் 
அடா லவ்லேசுக்கு 17 வயது ஆனது . அப்போது அடா, கணிதத்தில் பெருமையும், கண்டுபிடிப்புகளும்  செய்த பிரிட்டிஷ் நாட்டைச் சேர்ந்த, கணினி உலகின் தந்தை என்று போற்றப்படும்  சார்லஸ் பாபேஜ் என்ற கணித மேதையைத் தனது ஆசானான மேரி சோமேர்வில்லி  மூலம்   சந்தித்தார். பின்னர் அடா லவ்லேஸின் உலகமே வேறுபட்டு போனது. அடா  சார்லஸ் பாபெஜின் கணிதம் பற்றி உரையாடல் செய்கிறார். சார்லஸ் பாபேஜ் கணக்கீடு செய்யும் “வேறுபாட்டுப் பொறி” (Difference Engine) என்னும் ஒரு கணினிக்கு முன்னோடியான ஓர் எந்திரத்தை 1833 ல் வடிவமைக்கிறார். அதனைப் பார்த்து வியந்த அடா லவ்லேஸ், சார்லஸ் பாபேஜின் நண்பராகிறார். அதன் பின்னர் 18 வயது அடா லவ்லேசும்  மற்றும் 45 சார்லஸ் பாபேஜ் இருவரும் மதிப்பிடமுடியாத  அளவுக்குக் கணிதத்தால் நெருங்கி வாழ்நாள் நண்பர்கள் ஆனார்கள்.  45 வயது சார்லஸ் பாபேஜ் அடாவின் வழிகாட்டி மற்றும் ஆசான் ஆனார். அடா பாபேஜ்  மூலமாக லண்டன் பல்கலைக்கழகத்தில், பேராசிரியர் அகஸ்டஸ் டி மார்கன் உதவியுடன் கணிதத்தின் நவீன கருத்துகளைப் படித்தார். சார்லஸ் பாபேஜ்  கணக்கு போடும் வித்தியாசமான எந்திரமான கணினியின் பிதாமகன் என்பதாலும் அவரது கணித கொள்கையாலும் அடா  அவர் மீது மிகுந்த ஈடுபாட்டுடன் இருந்தார். 1837ல் சார்லஸ் பாபேஜ் உருவாக்கிய  பகுப்பாய்வு கணக்கு எந்திரம் (Analytical Engine) மெகா சைசில் இருந்தது.

அடாவும், கணக்கும், இசையும் 
கணக்குப் போடும் பகுப்பாய்வு எந்திரத்துக்கு (Analytical Engine) புரோகிராம் உருவாக்கியபோது அடாவுக்கு வயது 18. அறிவியல், கணிதத்துக்கு அடுத்தபடியாக அடா இசையை அதிகம் நேசித்தார். கணினி நிரல்கள் மூலமாக முதன்முதலில் இசையைக் கோர்த்தவர் அவரே. ’செயற்கை அறிவு’ குறித்த அவரது அன்றைய குறிப்புகளும் அவ்வளவாகக்  கண்டுகொள்ளப்படவில்லை. சார்லஸ் பாபேஜூக்கு நிகரான உழைப்பை அடா மேற்கொண்டபோதும், 1940-வரை அவருக்கு ஆணாதிக்க வரலாற்று உலகம் இடம் கொடுக்கவில்லை.

மொழியாக்கவியலாளர் & திட்டவியலாளர் அடா லவ்லேஸ்
அடா லவ்லேஸ் இளம் வயதிலேயே ஒரு வரம் பெற்ற கணித மேதை எனலாம். 1843ல் இத்தாலிய கணித மேதை லூய்கி மினிப்ரே(Luigi Menabrea) என்பவர் , கணக்கு போடும் பகுப்பாய்வு எந்திரம் (Analytical Engine) பற்றி  பிரெஞ்ச் மொழியில் ஸ்விஸ் நாட்டு அறிவியல் பத்திரிகையில்  எழுதி இருந்தார். அந்த  தகவல்களை எல்லாம், அந்த  எந்திரத்தின் சிறப்பான திறன்களை எல்லாம், அடா லவ்லேஸ் தனது அற்புதத் திறமையால் அனாயாசமாக மொழி பெயர்த்தார். அத்துடன் 1,௦௦௦ வார்த்தைகளில்  ஒரு விவரணக் குறிப்பையும் அத்துடன் இணைத்தார்.  லூய்கி மினிப்ரே எழுதியதை விட மூன்று மடங்கு அதிகமாகவே எழுதினார். இவை எல்லாம் சேர்த்து  65 பக்கங்களுக்கு எழுதி தள்ளினார். அவை எல்லாம் லூய்கி மெனாப்ரியா சொன்னதைவிட அதி அற்புதமாக விளக்கப்பட்டு இருந்தன. சார்லஸ் பாபேஜூக்கு எளிதில் புரியும்படி இருந்தன. கணிதக் கணக்கீடுகள் தவிர மேலும் இசை குறியீடுகள் /சுரம் கூட இதன் மூலம் பயன்படுத்த முடியும் எனக் குறிப்பிட்டார் அடா லவ்லேஸ். இதையெல்லாம் செய்தபோது அடா லவ்லேசின் வயது 27 மட்டுமே.

முதல் அல்காரிதம்
லூயிஸ் மினிப்ரேவின் ஆய்வைத் தொடர்ந்து பாபேஜூம், அடாவும் இணைந்து பகுப்பாய்வு இயந்திரத்தின் முதல் கணனி நிரலை எழுதினார்கள். இது  அடாவிற்கு நீடித்த புகழைத் தேடிக்கொடுத்தது. அடா தன்னை ஒரு ஆய்வாளர் என்றும் மீவியர்பியன் (Analyst & Metaphysician) என்றும் முன்னிலைப்படுத்த இது மிகவும் உதவியது. பாபேஜின் இயந்திரத் திட்டங்களைப் புரிந்து, இந்த  பகுப்பாய்வு எந்திரம் இன்னும் அதிகமாகப் பணிபுரியக்கூடிய விஷயம் பற்றியும் அடா லவ்லேஸ் விரிவாக அல்காரிதம் பற்றியும் விளக்கி இருந்தார் என்பதுதான் சிறப்பு. .உதாரணமாக இந்த எந்திரம் எப்படி பெர்னாலி எண்களைக் (Bernoulli numbers) கணக்கிடும் என்றும் குறிப்பிட்டு இருந்தார். எனவே இவற்றைப் பார்த்த கணினியின் வரலாற்றியலாளர்கள், ”அவைதான் கணித தகவல்களை பற்றி விளக்கிய முதல் கணினி திட்டம்/திட்டவமைப்பு  ( First Computer Program)”  என்றும் தெரிவிக்கின்றனர். மேலும், இது பொது நோக்கத்திற்காக கணினி என்றும் மிகச் சிக்கலான செயல்பாடுகளைத் (Complex Problem) தீர்க்க உதவும் என்றும் அடா லவ்லேஸ் தெரிவித்தார்.

அடா லவ்லேஸ்.. தனி வாழ்க்கை 
அடா லவ்லேஸ் 1835ல், தன்னை விட பத்து வயது மூத்தவரான  வில்லியம் கிங்  என்பவரை திருமணம் செய்து கொள்கிறார். பின், 1838ஆம் ஆண்டு இவர்கள் ஏர்ல் மற்றும் லவ்லேஸால் கவுண்டெஸ் (Earl and Countess of Lovelace) என்ற பட்டத்தின் மூலம் கௌரவிக்கப்பட்டனர். இதானால் அடா லவ்லேஸ் மூன்றாண்டுகள் லவ்லேசின் இளவரசியாகவும், பின்னர் கோமாட்டியாகவும்  வாழ்ந்தார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் பிறந்தன. . கணவர், 3 குழந்தைகள் எனக் குடும்ப நெருக்கடிகளுக்கு இடையேயும் கடைசிவரை தனது ஆராய்ச்சிகளை அடா கைவிடவில்லை.. அடா லவ்லேசின் கணவர் அவருக்கு அவரை சமூக தளத்தில் மேலேற்றி  ஏராளமான உதவிகள் செய்தார். ஆனால் திருமணத்துக்குப் பின்னர் அடா லவ்லேஸ் தனது இரண்டு மகன்களுக்கு தந்தையின் மேலுள்ள பிரியத்தினால் பைரன் மற்றும் கோர்டான் என்று பெயர் வைத்தார். அது மட்டுமில்லை. அடா லவ்லேஸ் இறந்த பின்னர் , அவருடைய விருப்பத்திற்கு இணங்க, அவளது உடல் ,லண்டன் நொட்டிங்காமில் (Nottingham, England) உள்ள செயின்ட் மேரி மக்டலேனே தேவாலத்தில் உள்ள கல்லறையில்  லார்ட் பைரனின் கல்லறைக்குப் பக்கத்திலேயே வைக்கப்பட்டது.

அடாவின் உடல் நிலை 
அடா பகுப்பாய்வு எந்திரம் (Analytical Engine) பற்றி எழுதி முடித்ததும், அடாவின் உடல்நிலை 1837ஆம் ஆண்டிலிருந்தே பாதிப்புக்குள்ளானது. பலவகையான நோய்கள் உருவாகின்றன.. முதலில் காலரா வந்தது.  பின்னர் அதன் வழியே ஆஸ்த்மா தொற்றிக்கொண்டது. பின்னர் வயிறு தொடர்பாக பிரச்சினைகள; அடா லவ்லேஸ் இறுதியாக கருப்பைப் புற்று நோயால் பாதிக்கப்படுகிறார். பல ஆண்டுகள் நோயுடன் மற்றும் வலியுடன்தான் வாழ்கிறார். இறுதியில் அவரது மருத்துவர் அவருக்கு வலி நிவாரணியாக ஓபியம் தருகிறார். அதன் பின்னர் அவரது குணம் இதனால் மாறத் தொடங்கியது. மனநிலை மாறி இதனால் மாயத் தோற்றங்கள் அவருக்கு ஏற்பட்டன. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அடா லவ்லேஸ் , தந்தை பைரனைப் போலவே தனது 36-வது வயதில் 1852.ஆம் ஆண்டு, , நவம்பர் மாதம்  27ம் நாள், இறப்பைத் தழுவுகிறார்.அடாவின் விருப்பப்படியே அவர் தந்தையின் கல்லறை அருகிலேயே அடக்கம் செய்யப்பட்டார்.

அடாவின் குறிப்புகள் ஆங்கில 1843ல்   பத்திரிகையில் வெளியானது. அதில் அவரது பெயரை AAL.  என்றே குறிப்பிட்டு இருந்தார். AAL என்பதற்கு ஆகஸ்ட் அடா லவ்லேஸ் எனபது பொருளாகும். அவரது குறிப்பில், அடா, எவ்வாறு குறியீடுகள் ஒரு வார்த்தை அல்லது எழுத்துகள் மற்றும் பயன்படுத்தும் விதம் பற்றியும் சொல்கிறார்.

அடாவின் இறுதி நாள்
அடா தான் இறக்கும் தறுவாயிலும் கூட தான் ஒரு முறை கூட பார்த்தே இராத அப்பா மேல் அவ்வளவு பாசம் கொண்டு தனது கணவரிடம் தான் தவறு செய்ததாக ஒத்துக்கொண்டார். அத்துடன் அவரது தந்தையின் கவிதை வரிகளை cain என்ற கவிதையிலிருந்து எடுத்து நம்புங்கள் ; மூழ்கி விடாதீர்கள் (Believe—and sink not)என்று கூறி முடிக்கிறார்.

இறப்புக்குப் பின்னர்
அடா லவ்லேஸ் 36 வயதிலேயே 1852.ல், நவம்பர் 27ம் நாள் இறந்துவிட்டார். ஆனால் அப்போது கணினி கணக்குப் போடும் எந்திரம் முழுமையாக  உருவாக்கப்படவில்லை. ஆனால் அவர் உருவாக்கிய கணினி மொழி /திட்டம் அவரது பெயரிலேயே அடா திட்டம் மொழி(Ada programming language) என்று அழைக்கப்படுகிறது.  இன்று வரை அப்படியே இயங்கி வருகிறது இன்று  கணினித் திரையில் நீங்கள் பார்ப்பது அவரது வடிவமைப்பு செயல்பாடுதான். அதன் பின்னர் அது பற்றிய குறிப்புகளும் அவரது செயல்பாடும், அடா லவ்லேசுக்கும், சார்லஸ் பாபேஜுக்கும் இடையில் உள்ள நட்பு இருவரின் திறமைகள்  , 2015ல்   கிராபிக் நாவல் உருவாக்கிய , இயங்குபட அமைப்பாளர்,  சிட்னி படூவாவின் எழுத்துக்களில் ஏராளமான தகவல்களாக உள்ளன. அவர் இந்த இரண்டு நண்பர்களைப் பற்றி முழுமையாக எழுதியுள்ளார். அதனால் Scientific American  பத்திரிகை படூவாவிடம் அடா லவ்லேஸ் நாளின்  முக்கியம் /அவசியம் குறித்து பேசியது. அது மட்டுமின்றி 1837-43 களில் ஒரு பெண் எவ்வாறு டிஜிட்டல் அனிமேஷன் துறையில் வருவது என்பது பற்றியும் பேசியது. .

இறப்புக்குப் பின்னர் பெருமை
கணிதத்திற்கு இவ்வளவு பங்களிப்பு செய்த அடா லவ்லேசை இந்த உலகம் 1950 வரை கண்டு கொள்ளவே இல்லை. பின்னர் அவரது குறிப்புகள் மீண்டும் இந்த உலகில் B.V. Bowden என்பவரால் 1953ல் மீள்துவக்கம் செய்யப்படுகிறது. கணினிக்கான நிரல்களைப் பின்னாளில் உருவாக்கிய பெண்களான ஜீன் ஜென்னிங்ஸ் பார்டிக், கிரேஸ் ஹாப்பர் ஆகியோரை உலகம் அடையாளம் கண்ட பின்புதான், அவர்களின் முன்னோடியான அடா லவ்லேஸ் வெளிச்சத்துக்கு வந்தார். அடாவின் குறிப்புகளின் அடிப்படையில் ஆராய்ச்சிகள் நடைபெற்றன.  அதன் பின்னரே அடாவுக்கு அவரது கணித பங்களிப்புகளுக்கு இறப்புக்கு பின் கிடைக்கும் ஏராளமான  விருதுகள் வழங்கப்படுகின்றன. அடாவைக் கவுரவிக்கும் வகையில் அமெரிக்க ராணுவம் அதன் பின்னர் 1980ல், அமெரிக்கப் பாதுகாப்புத் துறைக்குப்  புதியதாக ஒரு கணினி மொழியை  உருவாக்கி, அதற்கு அடா எனப் பெயரிட்டு அதனை “அடா நிரலாக்க மொழி” என்று அழைத்து அவருக்குப் பெருமை சேர்த்திருக்கிறது.

அடா லவ்லேஸ் நாள்
தொழில்நுட்ப உலகில் பாலினப் பாகுபாட்டினால் மறக்கடிக்கப்படும் பெண் வல்லுநர்களை இப்போது மேற்குலகம் வெளிச்சத்துக்குக் கொண்டுவருகிறது. இந்த முயற்சியில் ஒன்றாக 2009 முதல் ஆண்டுதோறும் அக்டோபர் 2-வது செவ்வாயன்று அடா லவ்லேஸ் நாள் சிறப்பிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டுக் கணிதம், பொறியியல், அறிவியல், தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் மற்றும் அத்துறையில் பணிபுரிவோர் மத்தியில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன 2௦௦9ம் ஆண்டிலிருந்து  ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் இரண்டாம் செவ்வாய்க்கிழமை அடா லவ்லேஸ் நாளாக கொண்டாடப்படுகிறது. அன்று பிரிட்டிஷ் சிவில் அக்ஷன் இடத்தின் முன்பு சுமார்  ஓர் உறுதி மொழி அடா லவ்லேஸ் பெயரால் எடுத்துக்கொள்ளப்படுகிறது. அறிவியல் ,தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதத்தில்(science, technology, engineering, and mathematics (STEM) ) பங்களிப்பு செய்த பெண்களுக்கு  அடா பெயரில் விருது கொடுத்து  பாராட்டப் படுகிறது.  நவீன கணினி உலகின் எழுச்சிக்கு வித்திட்ட பெண் தான் அடா லவ்லேஸ்.

பேரா. மோகனா


  
கல்ஹின்னை டுடே 
galhinnatoday@gmail.com

Post a Comment

Previous Post Next Post