கல்வி கண் திறந்தவர்

கல்வி கண் திறந்தவர்


இன்றைய மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் கல்வி நிலையங்கள், பள்ளிகள் போன்றன பெருமளவில் பங்களிப்புச் செய்கின்றன.

ஆனால் ஆரம்ப காலங்களில் ஆசிரியர்களின் வீட்டில் தங்கி மாணவர்கள் கல்வியைக் கற்று வந்தனர். பின்னர் நாள்தோறும் ஆசிரியர் வீட்டிற்குச் சென்று பயின்றனர். இதனை அடுத்து பொதுவானதொரு இடத்தில் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கல்வி கற்பித்தனர். இவையே இன்றைய பள்ளிக்கூடங்கள் ஆகும்.

இன்று பள்ளிக் கூடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளன. நவீன முறையிலும் கல்வி கற்பிக்கப்படுகின்றது.

இத்தகைய கல்விப் புரட்சிக்கு வித்திட்டவர் தான் படிக்காத மேதை கல்விக்கண் திறந்த காமராசர் ஆவார். காமராசர் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

இளமைக்காலம்
காமராசர் அவர்கள் 1903ஆம் ஆண்டு ஜூலை மாதம் 15ஆம் நாள் விருதுநகரில் குமாரசாமி-சிவகாமி அம்மையார் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார்.

தனது இளம்வயதிலேயே தந்தையை இழந்த காரணத்தால் தனது படிப்பை இடையிலேயே நிறுத்தி விட வேண்டிய நிலை ஏற்பட்டது.

இவரது குடும்பத்திற்கு வறுமை மட்டுமே சொத்தாக இருந்தது. இத்தகைய குடும்பச் சூழ்நிலை காரணமாக தனது மாமாவின் துணிக்கடையில் வேலை செய்தார்.

விடுதலைப் போரில் காமராசரின் பங்களிப்பு
செய்தித்தாள்களைப் படித்தும், தலைவர்களின் சொற்பொழிவுகளைக் கேட்டும் தனது அரசியல் அறிவையும் நாட்டுப்பற்றையும் வளர்த்துக்கொண்டார். இவைதான் இவர் விடுதலைப்போரில் பங்குபெறத் தூண்டியது எனலாம்.

காந்தியின் கொள்கைகளால் கவரப்பட்ட காமராசர் அவர்கள் காந்தி அடிகளின் அறைகூவலை ஏற்று உப்புச் சத்தியாக்கிரகப் போரில் கலந்து கொண்டார்.

சட்டமறுப்பு இயக்கம், ஒத்துழையாமை இயக்கம், அந்நியத் துணி எதிர்ப்புப் போராட்டங்களில் போன்றவற்றில் தன்னை ஈபடுத்திக்கொண்டார்.

கல்விப் பணிகள்
1953ஆம் ஆண்டில் காமராசர் அவர்கள் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றார். 1963 வரை ஒன்பது ஆண்டுகள் தமிழகத்தின் முதலமைச்சராக கடமையாற்றி கல்விக்குப் பல பங்களிப்பினைச் செய்தார்.

முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் தனது முதல் பணியை குருகுலக் கல்வி திட்டத்தை கைவிட்டார். கல்வியின் அருமை பெருமைகளை நன்கு உணர்ந்திருந்த காமராசர் அவர்கள் ஊர்தோறும் பள்ளிக்கூடங்களை திறந்தார்.

கட்டாயக்கல்வி, பகல் உணவுடன் கூடிய கல்வி எனப் பல திட்டங்களையும் வகுத்து கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்று புகழ் பெற பங்காற்றினார்.

முதல் 5 ஆண்டுகள் ஆட்சியில் 4260 தொடக்கப் பள்ளிகள் தொடங்கப்பட்டு 6076 படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு பணி வழங்கப்பட்டது.

படிக்காத மேதை
காமராசர் அவர்கள் ஆட்சி, கட்சி, பொதுவாழ்வு அனைத்திலும் புகழ் பெற்றவராவார். எந்தவிதமான சிக்கல்களையும் மிகவும் சுலபமாகத் தீர்த்து கொள்ளும் திறமை உடையவராவார்.

படிக்காதவராக இருந்தாலும் உலக அறிவு அவருக்கு நிறையவே இருந்தது.

“நான் பாடப்புத்தகத்தில் புவியைப் படிக்கவில்லை ஆனால் நாட்டில் எத்தனை ஏரி, குளங்கள் உள்ளன. அவற்றின் நீர்வளத்தை உழவுத் தொழிலுக்கு எவ்வாறு பயன்படுத்தலாம் என்று எனக்குத் தெரியும்” என்று கூறுவார்.

இதனால்தான் காமராஜர் படிக்காத மேதை எனப் போற்றப்படுகின்றார்.

முடிவுரை
எளிய குடும்பத்தில் பிறந்து தனது கல்விப் படிப்பினை பாதியில் தொடர முடியாமல் போனாலும் கல்விக்காக கல்விக்கண் திறந்த தேசியத்தலைவர் என்றென்றும் போற்றுதற்கு உரியவர் ஆவார்.

SOURCE;tamilkatturai

 


Post a Comment

Previous Post Next Post