கல்ஹின்னைக் கிராமத்தின் எதிர்காலத் தேவைகள் சில!

கல்ஹின்னைக் கிராமத்தின் எதிர்காலத் தேவைகள் சில!


கல்ஹின்னை டுடேயின் விசேட அலுவலக செய்தியாளர் அண்மையில்,  கல்ஹின்னைக் கிராமத்துக்கு விஜயமொன்றை மேற்கொண்டபோது, கிராமத்தினுள் ஆங்காங்கே தனிநபர் ரீதியாகவும், குழுக்களாகவும், பொதுநல சங்கங்களினாலும், அரசியல் பின்புலத்தினூடாகவும் அபிவிருத்தி வேலைகள் இடம்பெற்று வருவதைக் காண முடிந்ததாகக் குறிப்பிடுகின்றார். 

பள்ளிவாசல் எப்போதும் சனப்புழக்கமான இடமாக்காக் காணப்பட்டதுடன், தொழுகை நேரங்களின்போது, சந்தோசப்படும் அளவிற்கு வணக்கஸ்தர்கள் பள்ளிவாயிலுக்கு வருகை தருவதையும், மரணச் சடங்குகளின்போது பள்ளிவாயில் நிரம்பியிருப்பதையும்  காணக் கூடியதாக இருந்ததாகவும், அவர் மேலும் தெரிவித்தார். 

தற்போது பிரதேச சபைத் தேர்தலை எதிர்கொண்டு, வேட்பாளர்கள் வாக்கு வேட்டையில் ஈடுபட்டிருக்கின்ற நிலையில், வெற்றிக்குப்பின்னர்  அவர்கள் கவனம் செலுத்தவேண்டிய உசிதமான சிலவற்றை  'வேட்டை' பரிந்துரைக்கின்றது. 

பொது வாசிகசாலை
கல்ஹின்னைப் பள்ளிவாசல், மத்ரஸா அல்லது மும்தாஜ் மஹாலில் இடமொன்றை ஒதுக்கி, "பொது வாசகசாலை" ஒன்றை நிறுவுவது.

இதுவரை காலமும் கல்ஹின்னையில் பொதுவாசகசாலை பற்றி வெறுமனே பேசப்பட்டு வந்துள்ளதே தவிர, அதனை நிறுவுவதற்கான எந்த நடவடிக்கைகளும் எடுத்ததாகத் தெரியவில்லை!

அரை நூற்றாண்டுகளுக்கு முன்னர், கல்ஹின்னையில்  "லைப்ரரி" நிறுவும் திட்டத்தில், கிராமத்தில் அக்காலை 

இயங்கிவந்த பொதுநலச் சங்கமொன்று, கலண்டர்கள் விநியோகித்தும், வேறுவழிகளிலும்  பெருந்தொகையான நிதி திரட்டியபோதிலும், இன்றுவரை  ஆக்கப்பூர்வமாக  எதுவுமே நடந்துவிடவில்லை.

மிக அண்மையில் கூட, "வாட்ஸ்ஆப்"  ஜவான்கள், கல்ஹின்னையில்  பொதுவாசகசாலை நிறுவுவது பற்றி மிக மும்முரமாகப் பதிவுகள் இட்டுக் கொண்டிருந்ததையும், பின்னர் அவை 'புஷ்வானம்' ஆகிவிட்டதையும் யாவரும் அறிவர். 

கிராமத்தினுள் ஆங்காங்கே இளைஞர்கள் கூடித்திரிந்து, தகாத செயல்களில் ஈர்க்கப்படுவதை,  கிராமத்தினுள் ஒரு பொது வாசிகசாலை ஒன்று இருக்குமேயானால் ஓரளவுக்காவது அவர்களை, சீர்பாதைக்குக் கொண்டுவரலாம் என்பதை  நாம் ஒவ்வொருவரும் உணரவேண்டும்.

ஒற்றையடிப்பாதைகள்
கல்ஹின்னையில் எங்கெங்கெல்லாம் ஒற்றையடிப்பாதைகள் சீர்கெட்டு இருக்கின்றதோ அவற்றை இனங்கண்டு, அபிவிருத்தி செய்வது.

நன்னீர் வசதி
எங்கெங்கெல்லாம் நன்னீர் வசதி வேண்டப்படுகின்றதோ, அவ்வாறான இடங்களை இனங்கண்டு, தண்ணீர் வசதிகளை ஏற்படுத்துவது.

ஒளி வழங்கல்
கிராமத்துக்குள் எங்கெங்கெல்லாம் இருளடைந்த நிலையில் இடங்கள் காணப்படுகின்றதோ, அவ்விடங்களுக்கு ஒளி வழங்க எற்பாடு செய்வது.

பாடசாலையின் குறைபாடுகள்
அவ்வப்போது பாடசாலையில் ஏற்படுகின்ற குறைபாடுகளை இனங்கண்டு, இயன்றவரை அவற்றை அரச நிறுவனங்களினூடாகவே 

நிவர்த்தி செய்ய முயற்சிப்பது; முடியாத பட்சத்தில் கிராமத்தில்  இயங்கிவரும் பொதுநல சங்கங்களையோ, குழுக்களையோ அல்லது நலன்விரும்பிகளையோ நாடி அவற்றை நிறைவு செய்ய நடவடிக்கை எடுப்பது.

கல்வியைத் தொடர உதவுவது
கல்விச் செலவினங்களுக்காகக் கஷ்டப்படும் குடும்பங்களை  இனங்கண்டு, நிதி வசதி அல்லது கல்விக்கான உபகரணங்கள், புத்தகங்களைப் பெற்றுக்கொடுப்பது.


 


Post a Comment

Previous Post Next Post